மேட்டூர் அணை திறக்கப்பட்டது!
மேட்டூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் காவிரிப் பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்துவியாழக்கிழமை மாலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்காகமேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை அறிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து மாநில சமூக நலத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி மேட்டூர் விரைந்தார். அங்கு மாலை 6.05மணிக்கு அணை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சேவியர் கிறிஸ்டோநாயகம்,பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் அணை திறப்பு நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 52 நாட்கள் கழித்து திறக்கப்பட்டுள்ளது.விநாடிக்கு 18,000 கன அடி நீர் வரை அணையிலிருந்து வெளியேறிக் கொண்டுள்ளது. அடுத்த 137 நாட்களுக்கு தினசரிஒன்றரை டிஎம்சி நீர் வெளியேற்றப்படும்.
இதற்கிடையே மேட்டூர் அணையில் தற்போதைய நீர் மட்டம் 107 அடியாக உள்ளது. அதாவது 73.27 டிஎம்சி நீர் உள்ளது.அணைக்கு விநாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், அணை வேகமாக நிரம்பி வருவதாலும் காவிரி ஆற்றங்கரைஓரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.