கதிர்காமர் உடல் தகனம்: 12 நாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு
கொழும்பு:
சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை அமைச்சர் கதிர்காமரின் உடல் கொழும்பில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குநிகழ்ச்சியில் இந்தியா, நார்வே, பாகிஸ்தான், நியூஸிலாந்து உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் தலைவர்களும்கலந்து கொண்டனர்.
உடல் தகன நிகழ்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி அதிபர் சந்திரிகா கலந்து கொண்டார்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லட்சுமண் கதிர்காமர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந் நிலையில் கொல்லப்பட்ட கதிர்காமரின் உடல் தகனம் நேற்று மாலை கொழும்பில் நடந்தது. இதற்காக கொழும்பிலுள்ளசுதந்திர சதுக்கத்தில் விசேஷ தகன மேடை அமைக்கப்பட்டது.
நேற்று மாலை கதிர்காமரின் உடல் அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சுதந்திர சதுக்கத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலில் இலங்கையின் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.
சுதந்திர சதுக்கத்தை அடைந்ததும் அவரது உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. பின் சர்வ மத பிரார்த்தனை நடந்தது.இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் புத்த மத வழக்கப்படி கதிர்காமரின் உடல் அடக்கம் நடந்தது.
ராணுவ வீரர்கள் அணி வகுத்து நிற்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடைபெற்றது. உடல் தகன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் சந்திரிகாவிடம் கூறியிருந்தனர்.
ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அதிபர் சந்திரிகா நேரில் வந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், நார்வே, நியூஸிலாந்து உட்பட 12 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் சார்பில் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், வெளியுறவுத் துறைசெயலர் ஷியாம் சரண் ஆகியோர் கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்தியக் குழுவினர் நேற்று கொழும்பை அடைந்ததும் கதிர்காமரின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது மனைவியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடுத்தஇரங்கல் கடிதத்தை கொடுத்தனர்.
இதன் பின்னர் அதிபர் சந்திரிகாவை சந்தித்து அவரிடமும் சோனியா காந்தி கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுத்தனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்குப் பிறகு சுதந்திர சதுக்கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இந்திய ராணுவஅமைச்சர் பிரணாப் முகர்ஜி, கதிர்காமர் இந்தியா மற்றும் இலங்கை உறவுக்கு பாடுபட்டவர் என்றார்.
பின்னர் பிரணாப் முகர்ஜியும், நட்வர் சிங்கும் அதிபர் மாளிகைக்கு சென்று சந்திரிகாவை சந்தித்து பேசினார்கள். அப்போதுகதிர்காமரின் படுகொலைக்கு இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை அரசு எடுத்து வரும் சமாதான முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர்கள்சந்திரிகாவிடம் உறுதி கூறினர்.