தங்கர்பச்சானுக்கு திருமாவளவன் ஆதரவு: நடிகைகள் மீது பாய்ச்சல்
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கம் தனது எல்லையை மீறி அடாவடியான போக்கைக் கடைப்பிடிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இயக்குனர் தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் சங்கம் எல்லை மீறி நடந்துகொண்டுள்ளது. தங்கர்பச்சான் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு அங்கத்தினர் என்ற ஒரே காரணத்திற்காக அவரைஅவமானப்படுத்தியுள்ளனர்.ஒரு தமிழரான அவரை வேற்று மொழி நடிகர், நடிகைகள் (குஷ்பு-இந்தி, விந்தியா-தெலுங்கு) முற்றுகையிட்டு தகாதசொற்களால் திட்டித் தீர்த்து தமிழ் மொழி மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் கூட அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தி புறக்கணிப்புப் போராட்டம்நடத்தியுள்ளனர்.
ஏதோ தங்கர்பச்சான் மட்டும்தான் நடிகையை இழிவுபடுத்தி பேசியது போல ஒரு தோற்றத்தை நடிகர் சங்கம் ஏற்படுத்தியுள்ளது.தங்கர்பச்சானை இப்போது கண்டிக்கிறவர்களுக்கு அதற்கான யோக்கியதையும், தகுதியும் கிடையாது.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 21ம் தேதி தமிழகம் முழுவதும், ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாகவும், தாலுகா அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் திருமாவளவன்.