புலி ஆதரவு பேச்சு: பாமக எம்.எல்.ஏ. கைது
மதுரை:
காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியது தொடர்பான வழக்கில் வந்தவாசி பாமகஎம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் முருகேவல்ராஜன். தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற தலித் அமைப்பை நடத்திவருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் வந்தவாசி தனித் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.பாமகவில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை என்று கூறி பாமகவுடன் சேராமல் தனித்து இயங்கி வருகிறார் முருகவேல்ராஜன்.
கடந்த 1995ம் ஆண்டு காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகமுருகவேல்ராஜன் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் முருகவேல்ராஜன் கைதுசெய்யப்படாமல் இருந்து வந்தார். அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தும் கூட கடந்த 10 வருடமாக அவர்கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள பிடிவாரண்ட் வழக்குகளை விரைந்து முடிக்குமாறு மாநில டிஜிபிஅலெக்சாண்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், முருகவேல்ராஜனை கைது செய்ய காரைக்குடி போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்துவிளாங்குடியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற காரைக்குடி போலீஸார் முருகவேல்ராஜனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முருகவேல்ராஜன் தேவகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.