வீரப்பனுக்கு திடீர் அஞ்சலி! தர்மபுரியில் பரபரப்பு!
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் படத்திற்கு வன்னியர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதால் தர்மபுரிமாவட்டம் பாளையபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழக, கர்நாடக காவல்துறையினருக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவன் வீரப்பன்.எத்தனையோ வியூகங்கள் அமைத்தும் கூட வீரப்பனை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவனைப் பிடிக்கவே முடியாது என்று உறுதியாகமக்கள் கூறி வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையிலான அதிரடிப்படைதர்மபுரி மாவட்டம் பாடி வனப்பகுதியில் வைத்து வீரப்பனை வீழ்த்தியது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு அடுத்த மாதத்துடன் ஒரு ஆண்டு முடிகிறது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் என்றகிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் வீரப்பனின் உருவப் படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்த இளைஞர்கள் தாங்கள் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். வீரப்பன் படத்திற்கு அருகே சங்கத்தின் கொடிபறக்க விடப்பட்டிருந்தது ஜருகு, அசிப்பட்டி, கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து மாலைபோட்டு வீரப்பன் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப் பகுதி கிராமங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.