தொடரும் வி.ரசிகர்கள் - விடுதலைச் சிறுத்தைகள் மோதல்!
சென்னை:
சென்னையில், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பேனர்களை விஜயகாந்த் ரசிகர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பினர் விஜயகாந்த் மன்ற கொடிக் கம்பம் மற்றும் பெயர்ப் பலகைகளை உடைத்து எறிந்தனர்.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்சார்பில் புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தப் போராட்டம் தொடர்பாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மயிலாப்பூர், கே.கே.நகர், கத்திப்பாரா சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.இதனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கோபமடைந்தனர்.
தென் சென்னை மாவட்ட விடுதலைலச் சிறுத்தைகள் செயலாளர் இன்பரசன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கே.கே. நகர்போக்குவரத்து சிக்னல் அருகே கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேனர்களை கிழித்த விஜயகாந்த் ரசிகர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் சாலை மறியலில் இறங்கினர்.
உடனடியாக போலீஸார் அங்கு விரைந்தனர். விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகளுடன் பேசினர். உரிய முறையில் புகார் கொடுத்தால்,நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறினர். அதை விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, அதே கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடிக் கம்பம், பெயர்ப் பலகைஆகியவை ரம்பம் கொண்டு அறுக்கப்பட்டிருந்தது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி விஜயகாந்த்ரசிகர்கள் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் விஜயகாந்த்திடம் தகவல் தெரிவித்தார்.அதற்கு விஜயகாந்த், சாலை மறியல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். போலீஸாரிடம் புகார்கொடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் ரசிகர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரையும் போலீஸார் பெற்றுக்கொண்டனர்.
விஜயகாந்த் ரசிகர்கள், விடுதலைச் சிறுத்தைகள் இருவருக்கும் இடையே இன்று காலை ஏற்பட்ட இந்த மோதலால் கே.கே.நகர் பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.