கண்ணகி சிலையும் மீண்டு(ம்) வரும்: கருணாநிதி
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பெயர் காப்பாற்றப்பட்டதைப் போலவே கண்ணகி சிலையும் மீண்டும் உரிய இடத்தில் வந்துகாட்சி தரும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:சென்னைப் பல்கலைக்கழக பெயர் விவகாரத்தில் முதல் நாள் ஒரு முடிவைச் சொல்லிவிட்டு மறுநாள் பல்டி அடித்திருக்கிறது தமிழக அரசு.
திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் சென்னைப் பல்கலைக்கழகம் என்றுதமிழிலும் அப்படியே இருந்திருக்கலாம்.
ஆனால், இவர்கள் சென்னை பல்கலைக் கழகம் என்ற தமிழையே விழுங்கிவிடப் பார்த்தார்கள். நல்லவேளையாக எதிர்க் கட்சிகள்அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை என்ற தமிழ்ப் பெயர் அகற்றப்படாமல் போராடி, முதலை வாய்க்குள் போனதை 24 மணி நேரத்தில்மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.
இல்லாவிட்டால் இதே பசி வெறியுடன் பல தமிழ்ப் பெயர்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இறுதியாக தமிழ்நாடு என்ற பெயர் மீதும்தாவி தகர்த்திட நினைத்திருப்பார்கள்.
சட்டமன்ற குறிப்பில், சென்னைப் பல்கலைக்கழகம் என்று இருப்பதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகவும்,தீர்மானமாகவும், முதல் அமைச்சராக உள்ள ஜெயலலிதா தன்னையே சபாநாயகராகவும் பாவித்துக் கொண்டு தீர்ப்பளித்தாரே, அந்த முதல்நாள் முறுக்கு ஏன் மறுநாள் நறுக்கென்று முறிந்து உடைந்து தூள் தூளானது?
எங்கள் பகைவர்
எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்
ஒன்றாதல் கண்டே...
என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் செவிகளில் ஒலிப்பது தான் அதற்குக் காரணம். இதனால் தான் ஜெயலலிதாவின் ஆணவம்பொடிப்பொடியானது.
இந்த தமிழர் எழுச்சி முழக்கம் தொடர்ந்தால், கடற்கரையில் கம்பீரமாக நின்ற சிலம்புடைத்த செந்தமிழ்ச் செல்வி, கற்புக் கனல், பொற்படைமங்கையாம் கண்ணகியின் சிலை- இன்று அலங்கோலமுற்று- அருங்காட்சியகத்தில் அனாதையாகக் கிடக்கிறதே, அச் சிலையும் உரியஇடத்தில் மீண்டும் வந்து காட்சி தரும் அந்த நாளையும் நம் கண்களால் காணலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications