ஓகேனக்கல் விவகாரம்: புதிய சர்வே நடத்த மத்திய அரசு முடிவு
சென்னை:
ஓகேனக்கல்லில் உள்ள சிறிய தீவுத் திட்டு யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து புதிய சர்வே நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்தத் தீவை வைத்து கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இந்தப் பகுதியை ஆக்கிரமிக்கமுயல்வதாக இரு மாநிலங்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த திட்டை ஆக்கிரமிக்க விவசாயிகளைத் தூண்டி விட்டு வருகின்றன சில கன்னட அமைப்புகள்.
காவிரியைப் போல இந்த விவகாரமும் பெரிய அளவில் வெடித்துவிடாமல் தடுக்க மத்திய அரசு இதில் தலையிட முடிவுசெய்துள்ளது. அந்தப் பகுதியில் புதிய சர்வே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழகசட்டசபையில் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
முன்னதாக ஓகேனக்கல் விவகாரத்தை சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் கிளப்பினார்.
அவர் கூறுகையில், அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை மேற்கொள்வதை அதிமுக அரசு தவிர்க்க வேண்டும், இது மிகஅபாயகரமானது. இந்த விவகாரத்தை கர்நாடத்துடன் பேசித் தீர்க்கவோ அல்லது மத்திய அரசின் உதவியை நாடவோ தமிழகஅரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா,
இந்த விவகாரம் ஏன் வெடித்தது என்றே எனக்குப் புரியவில்லை. அந்தத் தீவு தமிழக பகுதியில் தான் உள்ளது. மத்திய அரசின்சர்வேயர் ஜெனரல் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அனைத்து வரைபடங்களும் இந்தத் தீவு தமிழகத்தில் இருப்பதை உறுதிசெய்கின்றன.
ஓகேனக்கல்லில் உள்ள சிறிய தீவுத் திட்டு யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து புதிய சர்வே நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
அந்த புதிய சர்வேயிலும் இது உறுதி செய்யப்படும் என நம்புகிறேன். அண்டை மாநிலங்களுடன் நல்லுறவைத் தான் தமிழகம்விரும்புகிறது. காவிரிப் பிரச்சனை உருவானது கூட கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கால் தான்.
இதனால் தான் நீதிமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் தமிழகத்துக்கு ஏற்பட்டது என்றார்.
இதற்கிடையே இந்தத் தீவு தங்களுக்கே சொந்தம் என கர்நாடம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இது குறித்து கர்நாடக துணைமுதல்வர் பிரகாஷ் கூறுகையில்,
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் அம் மாநில அரசு இந்த விவகாரத்தைக் கிளப்பி வருகிறது.அந்தத் தீவு கர்நாடகத்தின் ஒரு பகுதி தான். வழக்கமாக காவிரியை வைத்து பிரச்சனை செய்வார்கள். இந்த முறை நிறைய நீர்விடப்பட்டுவிட்டது. இதனால் ஏதாவது பிரச்சனை வேண்டும் என்பதற்காக இதை கையில் எடுத்துள்ளது தமிழக அரசு.
இந்த விஷயத்தின் ஜெயலலிதாவின் நிலை சட்ட விரோதமானது மட்டுமல்ல, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்றார்.