ஓடும் பஸ்சில் வியாபாரியை வெட்டி ரூ. 3 லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரை அருகே ஓடும் பஸ்சில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பல் ரூ. 3 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுதப்பியது.
விருதுநகரைச் சேர்ந்தவர் சந்திர பிரகாசம் (47). பருப்பு, மிட்டாய் மொத்த வியாபாரம் செய்து வரும் இவர், அனுப்பப்பட்டசரக்குகளுக்கு பணத்தை வசூலிக்க மதுரை வந்தார்.வழக்கம்போல் மதுரை கீழமாசி வீதியில் கடைகளில் ரூ. 3 லட்சம் பணத்தை வசூல் செய்துவிட்டு நள்ளிரவில் பெரியார் பஸ்நிலையம் வந்தார். அங்கிருந்து விருதுநகர் செல்ல, கோவில்பட்டி செல்லும் பஸ்சில் ஏறினார். அதில் 30 பயணிகளே இருந்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் பஸ் திருமங்கலத்தைக் கடந்து கரிசல் பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. பயணிகள்அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பஸ்சில் அமர்ந்திருந்த 6 பேர் எழுந்து டிரைவரிடம் சென்றனர்.
அவரது கழுத்தில் அரிவாளை வைத்து பஸ்ஸை நிறுத்தக் கூறினர். மிரண்டு போன டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். இதையடுத்துசந்திரபிரகாசத்திடம் வந்த அக் கும்பல், அவரது இரு கைகளிலும் வெட்டியது.
மற்ற பயணிகள் அலறிக் கத்த, துடித்தபடியே சரிந்த சந்திர பிரகாசத்திடம் இருந்து பணப் பையை எடுத்துக் கொண்டு அக் கும்பல்பஸ்சிலிருந்து இறங்கி இருட்டில் கலந்து ஓடிவிட்டது.
பலத்த வெட்டுக் காயத்துடன் மயக்கமான சந்திரபிரகாசம் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை மதுரை பஸ் நிலையத்தில் இருந்தே அக் கும்பல் தொடர்ந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.