கடலூர்: பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின- வீராணம் ஏரி உடையும் அபாயம்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முழுவதும் பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீரில்மிதக்கின்றன.
அதே போல சென்னை, நாகை, தஞ்சையிலும் கன மழை தொடருகிறது. வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தின்வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.திங்கள்கிழமை காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதுமே கன மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த மழை இன்றுகாலையில்தான் சற்று ஓய்ந்தது. இந்தக் கன மழை காரணமாக கடலூர் நகரிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பல இடங்கள்நீரில் மூழ்கிவிட்டன.
வீராணம் ஏரி உடையும் அபாயம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த ஏரிஉடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியிலிருந்து தான் சென்னை மாநகருக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரிக்கு அருகே உள்ள காட்டு மன்னார்குடியில்நேற்று ஒரே நாளில் மட்டும் 250 மில்லிமீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததால், ஏரிக்கு அபரிமிதமான நீர் வரத்து உள்ளது.
ஏரிக்கு விநாடிக்கு 6000 கன அடி நீர் தற்போது வந்து கொண்டுள்ளது. இதனால் ஏரி படு வேகமாக நிரம்பி வருகிறது. ஏரி நிரம்பி வருவதால்கீழ்க்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து 2600 கன அடி நீர் வெண்ணாற்றில்திறந்து விடப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது.
ஏரிக் கரை முழுவதும் மணல் மூடைகள் அடுக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏரியின் முழுக் கொள்ளளவான 44.5 அடியில் நீர்இருக்கம் வகையில் தண்ணீர் திறக்கப்படுவதாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஏரி உடைந்தால் சுற்றிலும் உள்ள 30 கிராமங்கள் நீரில் மூழ்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கிராம மக்கள் அங்கிருந்துவெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து கடலூரில் கன மழை பெய்து வருவதால் கடலூர் நகரம் மிதக்கிறது. இங்கு சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பலியாகியுள்ளார்கள்.
கடல் நீர் புகுந்தது:
கடலூர் துறைமுகத்தில் பெரும் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது.
முழுக்குத்துறை என்ற இடத்தில் கடலில் கொந்தளிப்பு அதிகமாகி கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்துகடலோரப் பகுதி மீனவர் குப்பங்கள் காலி செய்யப்பட்டு அந்தக் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில்வைக்கப்பட்டுள்ளனர்.