உயர் நீதிமன்றத்திற்கு 17 நீதிபதிகள் நியமனம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக மேலும் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 42 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 21 இடங்கள்காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பக் கோரி வழக்கறிஞர்களும், தமிழக அரசும் பல காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.இந் நிலையில் 17 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை அனுப்பியது.
இருப்பினும், நீதிபதிகளை நியமிக்க வேண்டிய மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வந்தது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாகதமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் பேச்சு எழுந்தது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்த 17 பேரில் 6 பேரை மட்டும் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த 17 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்பேரில் தற்போது 17 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் கிடைத்து விட்டது.
புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகள் விவரம்:
ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், முருகேசன், தமிழ்வாணன், ஜெயபால், தனபாலன், மோகன் ராம், ஆர். சுதாகர், ஜோதிமணி,நசிரூல்லா பாஷா, பால் வசந்தகுமார், ஜெயச்சந்திரன், ராஜேஸ்வரன், ஆர். ரகுபதி, சித்ரா வெங்கட்ராமன், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா, கே.சுகுணா மற்றும் சம்பத்குமார்.
இவர்கள் 17 பேரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை நீதிபதிகளாகப் பொறுப்பேற்பார்கள் எனத் தெரிகிறது. சென்னைஉயர்நீதிமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.