மத்திய அரசுக்கு ஜெ கொடுத்த உண்ணாவிரத ஷாக்
டெல்லி:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு, தேசிய பேரிடர் நிதியிலிருந்து மேலும் ரூ. 500 கோடி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்துமுதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தாரளமாக நிவாரணநிதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அவர் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு ஏற்கனவே வெள்ள நிவாரண நிதியாக ரூ. 500 கோடி தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து கூடுதலாக மேலும் ரூ. 500 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்காவிட்டால் நாடாளுமன்ற வளாகத்திலோ அல்லது சென்னை எம்ஜிஆர் சமாதியிலோஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 16ம் தேதி பிரதமரைச் சந்திக்க அவர் டெல்லி சென்றபோது உண்ணாவிரதத் திட்டமும் கைவசம் இருந்ததாகவும் அதுகுறித்து உளவுப் பிரிவான ஐபி அறிந்து, பிரதமரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னைச் சந்தித்த ஜெயலலிதாவிடம் தமிழகத்துக்கு உடனடியாக ரூ. 500 கோடி கூடுதலாக ஒதுக்க பிரதமர் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி இப்போது அந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications