அதிகாரிகள் இடமாற்றம்: டாண்டன் அதிரடி உத்தரவு
மதுரை:
3 வருடமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவல்துறை, அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தலைமைத்தேர்தல் ஆணையர் டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்யவேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தமிழகம் வந்துள்ள டாண்டன், கோவையில் திங்கள்கிழமை8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து நேற்று இரவு மதுரை வந்த டாண்டன், இன்று காலை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தஞ்சாவூர், நாகை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக்கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், புகைப்பட அடையாள அட்டை விநயோகம் குறித்து அவர் ஆட்சியர்களுடன்ஆலோசனை நடத்தினார். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும், தேர்தல்பணிகளில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
சப் இன்ஸ்பெக்டர் அளவிலிருந்து இந்த இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல, சொந்த ஊரில் பணியாற்றும்அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய ஆட்சித் தலைவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வாக்குப் பதிவுக்கு 15 நாட்களுக்கு முன்பு வரை புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும்.
போலி வாக்காளர்களைச் சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லை. அவர்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் தடை விதிக்கப்படும். இப்போதைக்கு எப்ஐஆர் தான் பதிவாகியுள்ளது. வழக்கின்தீர்ப்பைப் பொறுத்தே அவர்கள் போட்டியிட முடியுமா முடியாதா என்பது தெரியவரும்.
அதே நேரத்தில் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே தடை உள்ளது என்பதை சுட்டிக் காட்டவிரும்புகிறேன்.
வாக்குச் சாவடிகள் அமைக்கும்போது ஊனமுற்றவர்களும் எளிதாக வந்து ஓட்டு போடும் வகையில் சாய்வான பாதைக்அமைக்கப்பட வேண்டும்.
இந்த டிரான்ஸ்பர் உத்தரவு மூலம், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை வைத்து தேர்தல் வேலையை சுலபமாக முடிக்கும் ஆளும்தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் டாண்டன்.
பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்து விட்டதால், தேர்தல் தேதி குறித்தும்டாண்டன் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இன்று மாலை சென்னை திரும்பும் டாண்டன் அங்கு வடக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதையடுத்து தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.