தமிழகத்தில் கோலாகல காணும் பொங்கல்
சென்னை:
காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் வெள்ளம்அலைமோதுகிறது. பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், 3வது நாள் மாட்டுப் பொங்கல் என கடந்த மூன்று தினங்களாக களை கட்டிய தைத்திருநாளின் நிறைவு தின கொண்டாட்டமாக இன்று காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இன்று காலை முதல் தலைநகர் சென்னையிலிருந்து குமரி முனை வரை உள்ள தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.சென்னையில் மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்கள், விஜிபி கோல்டன் பீச், எம்.ஜி.எம், கிஷ்கிந்தா, மாமல்லபுரம் உள்ளிட்டஅனைத்துப் பொழுதுபோக்கு இடங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
திருச்சியில் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். கன்னியாகுமரியிலும் ஆயிரக்கணக்கானமக்கள் குடும்பத்தோடு குவிந்துள்ளனர். இதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம்அதிகம் உள்ளது.
இன்று மாலை வரை காணும் பொங்கலையொட்டி மக்கள் வெள்ளம் அதிகம் இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும்பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் குளிக்க சென்னை போலீஸார் தடை விதித்துள்ளதால் கடற்கரையில் விளையாடியும், அரட்டைஅடித்தபடியும் மக்கள் பொழுதைக் கழித்து வருகின்றனர். திரையரங்குகளிலும் கூட்டம் அலை மோதுகிறது
இதையொட்டி 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குதிரைப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீச்சல் தெரிந்த 500க்கும் மேற்பட்டோர் கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியிலும் மக்கள் அதிக அளவில் குவிவார்கள் என்பதால் அங்கும் பாதுகாப்புப்பலப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.