தேவர் வழியில் நடப்பேன்: கார்த்திக் சபதம்
தஞ்சாவூர்:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வழியில் நான் நடப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை என்று நடிகரும், தமிழகபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவருமான கார்த்திக் கூறியுள்ளார்.
திடீர் என்று அரசியலில் குதித்து, தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பதவியைப் பிடித்துள்ள நடிகர் கார்த்திக், கட்சித்தலைவரான பின்னர் தஞ்சாவூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், அகில இந்தியத் தலைவர் பிஸ்வாஸின் அனுமதியோடு உங்கள் முன் பேச வந்துள்ளேன்.இப்போது நான் ஒரு அகில இந்தியக் கட்சியின் மாநிலத் தலைவர். மிகவும் பொறுப்பான பதவி இது. இப்பதவி எனக்குக்கிடைத்துள்ளது இறைவன் கொடுத்த வரமாகும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்ற பெரியவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி இது. இக்கட்சியைமீண்டும் தமிழகத்தில் புதுப்பொலிவுடன், புத்தெழுச்சியுடன் விளங்கச் செய்வேன்- உங்களது ஆதரவோடு.
தமிழை வாழ வைக்க அனைவரும் உறுதியோடு உள்ளோம். கல் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க் குடி.அத்தனை பெருமை வாய்ந்த தமிழ் மொழி இப்போது அழிந்து விடுமோ என்று பயப்படுகிறோம். அந்தப் பயம் தேவையில்லை.நாமே நமது தாய் மொழியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.
தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி எதையும் தெரிந்து கொள்ள மாட்டோம் என்று கூறக் கூடாது. பிற மொழிகளும்தெரிந்தால்தான் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதாக சென்று வர முடியும்.
வாழ்க்கைப் பயணம் எளிதானதல்ல. கரடு முரடானது. நிறை குறைகள் இருக்கும். காட்டாறுகள் குறுக்கிட செய்யும்.அதையெல்லாம் தாண்டித்தான் போக வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் உழைப்பு, நேர்மை, தொலை நோக்குப் பார்வைஇருக்க வேண்டும் என்றார் கார்த்திக்.