திமுகவுக்கு கும்பிடு: திருவள்ளூர் மதிமுக தீர்மானம்
திருவள்ளூர்:
திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட்டு வரும் ரத்ததான முகாமின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காகதிருவள்ளூர் மாவட்ட மதிமுக செயற்குழு கூடியது.இக் கூட்டத்தில் திமுக மீது நிர்வாகிகள் பலரும் குற்றம் சாட்டிப் பேசினர். திமுக நம்மை மதிப்பதில்லை. கடந்த தேர்தலில் நமதுதலைவரின் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, வெற்றி பெற்ற பின்னர், நம்மைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
வரவிருக்கிற சட்டசபைத் தேர்தலிலும் நம்மை அனுசரித்து, அரவணைத்து திமுக நடந்து கொள்ளாது.
எனவே திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவது தான் நல்லது. இதற்கான முடிவை பொதுச் செயலாளர் வைகோ எடுக்கவேண்டும். இதை உத்தரவாக இல்லாமல் கோரிக்கையாக விடுக்கிறாம் என்று அவர்கள் பேசினர்.
இந்தக் கோரிக்கையை தீர்மானமாகவும் அவர்கள் நிறைவேற்றினர். திருவள்ளூர் மாவட்ட மதிமுகவினரின் இந்த தடாலடிகோரிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல பல மாவட்ட மதிமுகவினரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.