சென்னை விநாயகர் கோவிலில் வெடிகுண்டு
சென்னை:
சென்னை பாடி பகுதியில் விநாயகர் கோவிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாடி மதியழகன் நகர் பகுதியில் குபேர விநாயகர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று காலை பணிக்கு வந்த பணியாளர் கோவிலுக்குள் பிளாஸ்டிக் பையில் ஒரு மர்மப் பொருள் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார்.அப்போது அது வெடிகுண்டு போலத் தென்பட்டத்தால் உடனடியாக வெளியே வந்து கூச்சல் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் திரண்டனர். போலீஸுக்கு தகவல் தரப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அந்த மர்மப் பொருளை சோதித்துப் பார்த்ததில் அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு எனத் தெரிய வந்தது. இதையடுத்து அது தொலைவான தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். விநாயகர் கோவிலுக்குள் யார் வெடிகுண்டு வைத்தது என்பது குறித்து பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications