வட மாவட்டங்களுக்கு வர விஜயகாந்த் தயக்கம்?
வேலூர் :
தனது கட்சியில் வட மாவட்டங்களில் ஏகப்பட்ட ஜாதிப் பூசல்களும், கோஷ்டிப் பூசல்களும் நிலவுவதால் இப்போதைக்கு தென் மாவட்டங்களிலேயே தீவிர பிரசாரம் மேற்கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் மேற்கொண்டுள்ளார். கட்சியில் அடுத்த கட்டத் தலைவர் என்று யாரும் இல்லாத காரணத்தால் விஜயகாந்த்தே தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது.தற்போது அவர் தென் மாவட்டங்களில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ஆனால், வட மாவட்டங்களில் பிரசாரம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட பல பிரச்சாரக் கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.
வட மாவட்டங்களில் விஜயகாந்த் மேற்கொள்ளவிருந்த பல கூட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணமாக விஜய்காந்த் தரப்பில் கூறப்படுவது, பாமக தரும் பிரச்சனை.
பாமகவினரால் பிரச்சினை வரக் கூடும் என்பதாலும், அவர்களுடன் மோதி, எனர்ஜியை வீணடிப்பதற்குப் பதில், வாக்கு வங்கி அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலில் தீவிர கவனம் செலுத்த விஜயகாந்த் விரும்புகிறார்.
தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளை முழுவதுமாக பிரசாரம் செய்து முடித்து விட்டு, கடைசியாக வட மாவட்டங்களில், பண்ருட்டியாருடன் சேர்ந்து பிரசாரம் மேற்கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார் அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால், வட மாவட்டங்களில் கட்சிக்குள் பிரச்சனை இருப்பதே விஜய்காந்தின் தவிர்ப்புக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இந் நிலையில், விஜயகாந்த் வட மாவட்டங்களைப் புறக்கணிக்கிறாரா என்று, வேலூரில் மாவட்ட கட்சி அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்த அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேட்டபோது,
விஜயகாந்த் வட மாவட்டங்களில் பிரசாரம் செய்யத் தயங்கவில்லை. தற்போது அவர் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதை முடித்துக் கொண்டு 15ம் தேதிக்குப் பிறகு வட மாவட்டங்களிலும் பிரசாரம் செய்வார்.
கருணாநிதி தலைமையிலான ஆட்சியையும், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியையும் பார்த்து மக்கள் சலித்துப் போயுள்ளனர்.இப்போது அவர்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தை. வரும் தேர்தலில் இந்த மாற்றம் ஏற்படும்.
விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மாற்றத்தை கொடுக்கவிஜயகாந்த்தால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.
மக்கள் விருப்பத்தை அறிந்துதான், அதை மதித்துதான் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். மக்கள்எதிர்பார்ப்புக்கேற்ப எங்களது அரசியல் பணி அமையும் என்றார் பண்ருட்டியார்.












Click it and Unblock the Notifications