எத்தனை கட்டமாகத் தேர்தல்? 24ல் ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டசபைக்கு எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து வரும் 24ம் தேதி தேர்தல் ஆணையர் கோபால சுவாமி, சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.இந் நிலையில் தமிழகத்தில் எத்தனை கட்டமாக வாக்குப் பதிவு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையர் கோபால சுவாமி 23ம் தேதி சென்னை வருகிறார். முதலில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் அவர் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.
பின்னர் 24ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இறுதி செய்யும் எனத் தெரிகிறது.
அடையாள அட்டை-சிறப்பு முகாம்கள்:
இந் நிலையில் தமிழகத்தில் விடுபட்ட வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அதில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசமும் 12ம் தேதியுடன் முடிந்து விட்டது. வரும் 27ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகவுள்ளது.
இந் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு இன்று முதல் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது. 234 தொகுதிகளிலும் இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று வாக்காளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு வாக்காளர் அட்டையைப் பெறலாம்.
புகைப்படம் எடுத்த அரை மணி நேரத்தில் புகைப்பட அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30ம் தேதி வரை இப்பணி நடைபெறவுள்ளது.