மதுரை இன்ஸ்பெக்டருக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
அடாவடிக்குப் பெயர் போன சர்ச்சைக்குரிய மதுரை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அந்தப் பதவியில் தொடருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை அண்ணா நகர் காவல் நலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மாரிமுத்து, வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த அபிடவிட்டையே திருத்தினார். இந்த மோசடியைச் செய்த மாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், இந்த மோசடி இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொண்டது.
இதையடுத்து மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
மதுரை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் தமிழக அரசும், காவல்துறையும் வழக்கறிஞர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. மாரிமுத்துவை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தினர்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத தலைவர் பிரபாகரன் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், மோசடி செய்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அந்தப் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர், மனுதாரரின் வழக்கில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக தொடரக் கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.
இதுதொடர்பாக மாநில உள்துறைச் செயலாளர், டிஜிபி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாரிமுத்து டிஸ்மிஸ் செய்யப்படும் வரை தங்களது கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்று மதுரை வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.