கருணாநிதி கண்ட பிறைகளை எண்ணும் நாஞ்சில்!
பூவிருந்தவல்லி:
ஆயிரம் பிறை கண்ட கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நல்லாட்சி மலர பாடுபடுவோம் என்று மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியை நோக்கி மதிமுக நகர்ந்து கொண்டிருந்தபோது திமுகவையும், கருணாநிதியையும் அதிமுகவினரை விட மிக மோசமாகத் தாக்கி மிகக் கடுமையாக பேசி வந்தார் நாஞ்சில் சம்பத்.இந் நிலையில் தடாலடியாக வைகோ முடிவெடுக்க அது, நாஞ்சில் சம்பத் போன்ற மதிமுகவினருக்கு பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்துள்ளது.
எந்த வாயால் கருணாநிதியையும், திமுகவையும் விமர்சித்துப் பேசினாரோ அதே வாயில், கியரை மாற்றிப் போட்டு, இப்போது திமுகவையும், கருணாநிதியையும் ஆகா.. ஓஹோ என்று பாராட்டிப் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
இதனால் இப்போது திட்டுவதற்கு வசதியாக விஜயகாந்த்தைப் பிடித்துக் கொண்டுள்ளார் நாஞ்சில்.
சென்னை அருகே மாங்காட்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் சம்பத் பேசுகையில், ஆயிரம் பிறை கண்டவர் கலைஞர் கருணாநிதி. அவரது தலைமையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம். கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளையே நான் பிரதிபலித்து வருகிறேன்.
அந்தப் பேச்சுக்கள், அதன் உண்மையான அர்த்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. குரு பார்வை இருந்தால் வெற்றி நிச்சயம், வைகோவின் பார்வை இருந்தாலும் வெற்றி நிச்சயம்தான்.
இப்போது வைகோவின் வெற்றிப் பார்வை திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
ஒரு நடிகர் (விஜய்காந்த்), எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேன் என்னிடம் உள்ளது, இதனால் என்னை முதல்வராக்குங்கல் என்று கூறி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். வேன் இருந்தால் மட்டும் ஒருவர் எம்.ஜி.ஆராகி விட முடியுமா?
ஜெயலலிதா ஆட்சியில், உரித்த கோழியை ஃபிரிட்ஜில் வைத்திருப்பது போல அமைச்சர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஜெயலலிதாவே பதில் சொல்கிறார். பிறகு எதற்கு அமைச்சர்கள்?. இவர்களுக்கு என்ன தான் வேலை? என்றார் சம்பத்.