திருமாவை கை கழுவிய ராமதாஸ்
காஞ்சிபுரம்:
நானும், திருமாவளவனும் இணைந்து போராட நிறைய களங்கள் உள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செங்கல்பட்டில், எஸ்.சி, எஸ்.டி பிரிவு அரசு ஊழியர் சங்க சிறப்பு மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,உங்களது கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன், போராடுவேன். எங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, வீட்டுக்கு ஒரு அரசு வேலை தர வேண்டும் என குறிப்பிடவுள்ளோம்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என 1980ம் ஆண்டு முதலே நான் கூறி வருகிறேன்.
இந்த நோக்கத்திற்காகவே நானும், திருமாவளவனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இருவரும் இணைந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகிறோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்பட ஏராளமான களங்கள் உள்ளன. சமூக நீதிக்காக இருவரும் இணைந்தே போராடுவோம் என்றார் ராமதாஸ்.
இதன்மூலம் அரசியல் களத்தில் இப்போதைக்கு திருமாவளவனுடன் இணைய முடியாது (திருமாவுக்கு திமுக இடம் தர மறுத்ததால்) என்பதை ராமதாஸ் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
மேலும் திருமாவளவனை முதல்வர் ஜெயலலிதா அழைத்துப் பேசப் போவதையும் முன் கூட்டியே ராமதாஸ் அறிந்திருந்தாகத் தெரிகிறது. இதையடுத்தே திருமாவுடன் அரசியல் கூட்டணி இல்லை என்பதை ராமதாஸ் சூசகமாக அக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.