வைகோவை நினைச்சேன்.. சிரிச்சேன்-வெ.கொ
சென்னை:
கலைஞரைப் போல தலைவர் இல்லை என்று பேசிய வைகோ, இப்போது அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அவர் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆவேசமாக கேட்டார்.
சென்னை தி.நகரில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசுகையில், நம்மிடம் இருந்து போனதும் இல்லாமல், வைகோ போட்டோவுக்கு போஸ் கொடுப்பதைப் பாருங்கள்.கூட்டணியிலிருந்து விலகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், கலைஞரைப் போல ஒரு தலைவர் கிடையாது என்று பேசினார். வைகோ உப்பு போட்டுத்தான் சோறு சாப்பிடுகிறாரா?
இந்த தள்ளாடும் வயதிலும், வேலூர் சிறைக்குப் போய் வைகோவைப் பார்த்தார் கலைஞர். உங்க அப்பா இருந்திருந்தால் வந்து பார்த்திருப்பாரா?
நாற்காலி வேண்டும் என்பதற்காக தள்ளுவண்டி போல இங்கும், அங்கும் அலைவது நல்லதல்ல.
இன்னும் ஒன்றரை மாதத்தில் கண்ட்ரோல் எங்க கைக்கு வந்திடும். அப்புறம் பாருங்க கதையை.
நாங்க எதுவுமே செய்யலையாம், சாதிக்கலையாம். என்னய்யா சாதிக்கவில்லை? ஒரு ரூபாயில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேச வாய்ப்ப கொடுத்திருக்கிறோம். இதை விட என்ன வேணும்?
தளபதி ஸ்டாலின் தமிழகத்தை கலக்குகிறார், மாறன் மகன் இந்தியாவையே கலக்குகிறார்.
நாங்க எல்லாப் பேரும் சேர்ந்து வைகோ விடுதலைக்காக பொடா சட்டத்தை எடுக்கச் சொல்லி கையெழுத்து போட்டோம், ஜனாதிபதி கிட்டப் போய் மனுகொடுத்தோம், பொதுக் கூட்டம் போட்டோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் இவர் போய் சேர்ந்திருக்கிற இடத்தைப் பாருங்க, நினைத்தால்சிரிப்புதான் வருகிறது என்றார் வெற்றி கொண்டான்.