சிறுதாவூர் தலித் நிலம்: டிச.1ல் நீதிபதி ஆய்வு
சென்னை:
சர்ச்சைக்குரிய சிறுதாவூர் தலித் நிலத்தை விசாரணைக் கமிஷன் தலைவரான நீதிபதி சிவசுப்ரமணியன் டிசம்பர் 1ம்தேதி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் தலித் மக்களுக்காக மறைந்த அண்ணா ஆட்சியின்போது ஒதுக்கப்பட்டநிலத்தை ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆக்கிரமித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுதொடர்பாக விசாரணை நடத்தி நிலத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்திருந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்ரமணியன் தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு நியமித்தது.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க பல்வேறு தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதைஏற்று இளையராஜாவின் மகள் பவதாரணி, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரின்சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே வருகிற டிசம்பர் 1ம் தேதி சிறுதாவூரில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை நேரில் பார்வையிட்டுஆய்வு செய்ய நீதிபதி சிவசுப்ரமணியன் முடிவு செய்துள்ளார்.
அப்போது தன்னுடன் நிலத்தைப் பார்வையிட விரும்பும் யாரும் உடன் வரலாம் எனவும் நீதிபதி சிவசுப்ரமணியன்அறிவித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி இந்த வழக்கு தினசரி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.