ரயிலுக்கு குண்டு மிரட்டல்-ஆந்திர இளைஞர் கைது
சென்னை:சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நான் ஒரு தீவிரவாதி, தாம்பரத்திலிருந்து பேசுகிறேன். சேலம், கோவை செல்லும் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் உடனடியாக சென்டிரல் ரயில் நிலையம் உஷார்படுத்தப்பட்டது. சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் சேலம், கோவை மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தொலைபேசியில் பேசிய நபர் யார் என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீஸாரின் உதவி நாடப்பட்டது. தொலைபேசி டாடா நிறுவன எண்ணிலிருந்து பண்ணப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த மிரட்டல் நபர் 24 மணி நேரத்திற்குள் போலீஸாரிடம் சிக்கினார். அவரது பெயர் கிரண். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனம் அருகே உள்ள கோட்டவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் விளையாட்டுக்காக இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் குடியரசுத் தலைவர் விமானத்துக்கு இதுபோல விளையாட்டுத்தனமாக மிரட்டல் விடுத்து நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பராஜ் என்ற இளைஞரை போலீஸார் சாதுர்யமாக வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கிரணையும் 24 மணி நேரத்திலேயே போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டனர்.
இதுபோல விளையாட்டுத்தனமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.