சர்ச்சை ஆசிரமத்தில் மேலும் ஒரு பெண் மரணம்
பொன்னேரி:சென்னை அருகே சர்ச்சையில் சிக்கியுள்ள சோழவரம் அமுதானந்த தவயோகி ஆசிரமத்தில் மேலும் ஒரு வயதான பெண் நேற்று மரணம்அடைந்தார்.
சோழவரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா ஆத்மாலயம் என்ற ஆசிரமம் உள்ளது. இதை அமுதானந்த தவயோகி என்ற சாமியார் நடத்தி வருகிறார்.இந்த ஆசிரமத்தில் 10 பேரின் உடல்கள் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. பொன்னேரி டிஆர்ஓ சங்கீதா நே-ரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், சாமியார்தவயோகி குழப்பமான விளக்கங்களைத் தந்தார்.
விசாரணை அறிக்கையை டிஆர்ஓ சங்கீதா திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கி விட்டார். விரைவில் ஆசிரமம் தொடர்பாக மாவட்டஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று மேலும் ஒரு பெண் மரணமடைந்தார். அவரது பெயர் சரஸ்வதியம்மாள் (வயது 60). மீஞ்சூரைச் சேர்ந்தவர். சிலவருடங்களுக்கு முன்பு இங்கு அவர் சேர்ந்தார்.
சரஸ்வதியம்மாள் இறந்தது குறித்து சோழவரம் போலீஸாருக்கு ஆசிரமம் தகவல் கொடுத்தது. கிராம நிர்வாகி அதிகாரிக்கும் தகவல் போனது.இதையடுத்து அனைவரும் ஆசிரமத்திற்குச் சென்றனர். விசாரணை நடத்திய பின்னர் சரஸ்வதியம்மாளின் உடல் போலீஸார், அதிகாரிகள்-முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.