ஜெ.வின் தமிழர் விரோத உண்ணாவிரதம்-ராமதாஸ்
சென்னை:காவிரிப் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருக்கப்போகும் உண்ணாவிரதம், தமிழக நலனுக்கு விரோதமானதுஎன்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கோரி ஜெயலலிதா உண்ணாவிரம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தமிழகநலனுக்கு எதிரானது. கர்நாடகத்துக்கு சாதகமானது.
இந்தப் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. காழ்ப்புணர்ச்சி அரசியலை அவர் இன்னும் கைவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது.
சென்னையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதால் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தகுடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்பாடது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதா அல்லது புதிய விமான நிலையங்கள் அமைப்பதா என்று முடிவு செய்வதில் கடந்த 6 ஆண்டுகளாகதாமதம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் எங்கேயாவது இடம் இருந்தால் சொல்லும்படி மத்திய அரசு கேட்டுள்ளது.
புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க பல இடங்களை ஆய்வு செய்தார்கள். ஆனால் இன்னும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை.
அடுத்த 25 ஆண்டுகளில் விமானங்களின் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே புதிய விமான நிலையங்கள் அவசியம் தேவை.மும்பை, டெல்லி போன்று சென்னைக்கும் 2 விமான நிலையங்கள் தேவை.
உயர்நீதிமன்றத்தில் பிராந்திய மொழிகளை நிர்வாக மொழியாக ஆக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசுஇரட்டை அளவு கோல் எடுப்பதாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 19 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மத்தியில் ஆட்சி மொழி ஆகிவிடும்.உயர்நீதிமன்றத்திலும் நிர்வாக மொழியாக வரும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். வரும் 23ம்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பாமக தோழமை உணர்வோடு பொறுப்புள்ள எதிர்கட்சியாகசெயல்படும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications