பாம்பனில் 15,000 மீனவர்கள் உண்ணாவிரதம்;பந்த் : வெறிச்சோடிய ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையின் அத்துமீறலைக் கண்டித்து பாம்பன், ராமேஸ்ரவத்தில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. இதனால் இரு ஊர்களும்வெறிச்சோடிக் கிடக்கின்றன. பாம்பனில் 15 ஆயிரம் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இலங்கையின் அத்துமீறலைக் கண்டித்து நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதையடுத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து, ஆட்டோ ஓடவில்லை. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருவதால் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
பாம்பனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தபடி இன்று உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டமீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பந்த், உண்ணாவிரதத்தையொட்டி இரு ஊர்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.