இலங்கைக்கு ராக்கெட் லாஞ்சர் தயாரிப்புகருவி கடத்தல்: 2 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:இலங்கைக்கு ராக்கெட் லாஞ்சர் தயாரிக்க பயன்படும் கருவியைக் கடத்த முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் படகும் பறிமுதல்செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது தோப்புவலசை கிராமம். மீனவ கிராமமான இங்கு கடந்த நவம்பர் 8ம் தேதி சுங்க இலாகாஅதிகாரிகள் ரோந்து வந்தனர். அப்போது கடற்கரையில் நின்றிருந்த நான்கு பேர் அதிகாரிகளைப் பார்த்து விட்டு ஓடினர்.
இதையடுத்து அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, கடலில் மிதந்த நிலையில் ஒரு கருவி தென்பட்டது.
அதைக் கைப்பற்றி பரிசோதித்தபோது, லேத் நிறுவனங்களில் உள்ள இயந்திரம் என்பது தெரிய வந்தது. இதைப் பயன்படுத்தி ராக்கெட் லாஞ்சர்கள்தயாரிக்க முடியும் என்பதால் அந்த நான்கு பேரும் இதை இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் யோசித்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களில் இருவர் சிக்கியுள்ளனர்.தனுஷ்கோடியைச் சேர்ந்த பாலன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்துமுனியன் ஆகிய அந்த இருவரையும் கைது செய்த கியூ பிரிவு போலீஸார்,அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுதக் கடத்தல் தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும்,இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications