விவசாய நிலங்களை கையகப்படுத்த கம்யூ எதிர்ப்பு
சென்னை:சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை அரசே முன்னின்று கையகப்படுத்த கூடாது. அதை சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விவசாயிகள் நல்வாழ்வைப் பாதுகாக்க ஏப்ரல் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடுமுழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதில் 2 குழுக்கள் பங்கேற்கின்றன.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமை தாங்குகிறார்.இதை நான் தொடங்கி வைக்கிறேன்.
இதே நாளில் ஊட்டியிலிருந்து புறப்படும் குழுவுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் தலைமை தாங்குகிறார். இதைநல்லக்கண்ணு தொடங்கி வைக்கிறார்.
இதன் கடைசி நாளான 27ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. முடிவில் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட மனுமுதலமைச்சரிடம் கொடுக்கப்படும். இதற்காக 1 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெறப்படுகிறது.
விவசாயிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும். விவசாய நிலங்களை தொழில் தொடங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு தேவையான நிலங்களை அரசே முன்னின்று கையகப்படுத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நிலத்தை தெரிவு செய்து அவற்றை பெற முனைய வேண்டும்.
விவசாயத் தொழிலாளர் அனைவருக்கும் தனித்தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் கூறியது ஒரு ஆலோசனையே தவிர நிபந்தனை அல்ல.இந்த விழிப்புணர்வு பேரணி அரசுக்கு எதிரானது அல்ல என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications