பணம், போலி பாஸ்போர்ட்டுகளுடன் இலங்கை நபர் கைது
சென்னை: சென்னையில் 3 லட்சம் ரூபாய் பணம், 25 போலி பாஸ்போர்ட்டுகளுடன் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவான்மியூரில் இலங்கையைச் சேர்ந்த நிமலன் என்கிற சஞ்சய் என்ற வாலிபரின் நடமாட்டம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் போனது.
இதையடுத்து நிமலன் தங்கியிருந்த அறைக்குப் போலீஸார் விரைந்தனர். ஆனால் அதற்குள் நிமலன் தப்பி விட்டார். இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரூ. 3 லட்சம் பணம், 25 போலி பாஸ்போர்ட்டுகள், ஒரு டைரி ஆகியவை சிக்கின.
அந்த டைரியில் வெட்டுவாங்கேணி பகுதியில் உள்ள ஒரு முகவரி இருந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த நிமலனை போலீஸார் கைது செய்தனர்.
பணம் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகளுடன் நிமலன் சிக்கியுள்ளதால் அவர் ஆயுதம் வாங்குவது தொடர்பாக தமிழகத்திற்கு வந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications