திருவாரூர்: போட்டி தேரோட்டம் நடத்த முயன்ற இல.கணேசன், 500 பாஜகவினர் கைது
திருவாரூர்:திருவாரூரில் காவல்துறை தடை உத்தரவை மீறி போட்டி தேரோட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவர் இல.கணேசன் தலைமயிலான 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆழித் தேரோட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் ஆயில்யம் நட்சத்திர நாளன்றுதான் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று பாஜக கூறியது. அதை ஏற்க மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது.
இதையடுத்து ஆயில்ய நட்சத்திர நாளான இன்று போட்டி தேரோட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. போட்டித் தேரோட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
மேலும், திருவாரூரில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதிக அளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் தயாரித்து வைத்திருந்த மாதிரி தேரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருவாரூரில் மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர்.
அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.