நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டக் கோரிதமிழக சட்டசபையில் தீர்மானம்
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த இடைக்கால தீர்ப்பு குறித்து விவாதித்து நல்ல முடிவு எடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில், இன்று பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, இதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் அந்த தீர்மானத்தை முதல்வரே கொண்டு வந்து ேபசினார். அவர் பேசுகையில், உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பால், கல்வியிலும், சமூக முன்னேற்றத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
நாடாளுமன்ற உரிமையை பாதிக்கும் வகையிலான இந்தத் தீர்ப்பு குறித்து விவாதித்து, நல்ல முடிவெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட வேண்டும். இந்தத் தீர்ப்பினால் அடித்தட்டில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய முடிவு எடுக்க இந்த சபை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று கூறினார்.
பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தீர்மானத்தின் நகல், குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications