மன்மோகன்,சோனியாவுக்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:இட ஒதுக்கீடு சட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான் உங்ளுடைய கவனத்துக்கு தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம் என்பதைக் கொண்டு வர விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முன்பு இருந்த திமுக அரசின் கருத்தை ஏற்றுத்தான் அப்போதைய வி.பி.சிங் அரசு மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது.
கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழக மக்கள் அனைவரும் 29.3.2007 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடையாணையால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தமிழக மக்கள் சார்பிலும், அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், வருகிற கல்வியாண்டிலிருந்து இட ஒதுக்கீடு பலனை பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் வகையில், முடிவு எடுக்க நாடாளுமன்றத்திந் இரு அவைகளையும் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications