மீலாடி நபி: ஆளுநர், முதல்வர், ஜெ. வாழ்த்து
சென்னை:மீலாடி நபியை முன்னிட்டு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மீலாடி நபி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முகம்மது நபிகளின் பிறந்த தினமான மீலாடி நபியைக் கொண்டாடும் தமிழக முஸ்லீம் பெருமக்களை வாழ்த்துகிறேன்.
நபிகளாரின் போதனைகள் மீதான நமது நம்பிக்கைகைய இன்றைய நாளில் அறுதியிட்டு உறுதியாக வெளிப்படுத்துவோம். சகோதரத்துவம், அமைதி, பரஸ்பர அன்பு பெருக உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2006ம் ஆண்டு திமுக அரசு பதவிக்கு வந்ததும் மீலாடி நபி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது. ஆனால் பின்னர் வந்த அதிமுக அரசு அதை ரத்து செய்தது.
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நபிகளார், உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என தனது போதனைகளில் கூறியுள்ளார்.
அதற்கேற்ப, திமுகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டது, நிறைவேற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் அமைதி, அன்பு, சமத்துவத்தைதப் போதித்தார். அது இன்றைக்கும் பொருந்தக் கூடிய செய்தியாகவே உள்ளது.
தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும், நமக்கு நபிகளாரின் போதனைகள் வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications