மீனவர்கள் சாவு: விசாரணை கோரும் கருணாநிதி
குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை சுட்டிக் காட்டி கடந்த பிப்ரவரி 27, பிப்ரவரி 28 ஆகிய நாட்களில் இருமுறை கடிதம் எழுதியுள்ளேன். மார்ச் 7ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினேன். தற்போது அதன் தொடர்ச்சியாக இந்தக் கடிதம் எழுதுகிறேன்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக, வெறித்தனமாக தாக்குதல் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.
மார்ச் 29ம் தேதி காலை 6.30 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 35 மைல் கைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இதில் 5 மீனவர்கள் இறந்துள்ளனர். உயிர் தப்பிய 4 மீனவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடமிருந்து சில தகவல்களைக் கேட்டறிய முடிந்துள்ளது.
அதாவது அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையிலிருந்து 40 முதல் 45 அடி நீளமுள்ள இரு படகுகள் வந்துள்ளன. அவர்கள் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் இந்திய மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.
அவர்கள் வந்த படகு ஒன்றில் மரியா என எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 20 இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் திறந்த மார்புடனும், சிலர் சாதாரண உடையிலும் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு முடிந்ததும், இந்திய மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அவர்கள் தப்பியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதி அளித்துள்ள போதிலும், இந்தியக் கடலோரக் காவல்படையின் தீவிர ரோந்துப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.
கடலோரத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினரும், மற்ற மக்களும் இந்த சம்பவத்தால் கொதித்துப் போயுள்ளனர். எனவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார், இதில் சர்வதேச அளவில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மத்திய அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வோண்டும்.
தமிழக கடலோரக் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதில், கிழக்குக் கடற்கரை அல்லது மேற்குக் கடற்கரை என்பது போன்ற சில குழப்பங்கள் வருகின்றன. எனேவ தமிழக கடலோர கண்காணிப்புப் பணியை ஏதாவது ஒரு தலைமையின் கீழ் கொண்டு வந்து குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications