நடுக்கடலில் பாம்பன் மீனவர்களை கடத்திய சிங்கள மீனவர்கள்!!
ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று அவர்களை அடித்து சித்தரவதை செய்துள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் பகுதியை சேர்ந்த சுரேஷ், தாவீது, கிறஸ்துவராஜ், அடிமை, மில்டன், கொலம்பஸ், செல்வம், ராஜ், அமுதன், ரீகன், குழந்தை, கென்னாடி ராயப்பன், மரியடேவிட் ஆகிய மீனவர்கள் 3 நாட்டு படகுகளுடன் கடந்த 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடந்த 29ம் தேதி இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 6 விசை படகுகளில் சிங்கள மீனவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து 14 மீனவர்களையும் தாக்கி அவர்களை கடத்தி சென்றனர்.
தலைமன்னார் அருகே உள்ள கல்பட்டி என்ற இடத்தில் 14 மீனவர்களையும் அடைத்து வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர்.
எங்கள் எல்லையில் வந்து மீன் பிடிப்பதால் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் வலைகளை தமிழக மீனவர்கள் அறுத்து எறிந்து செல்கின்றனர். எனவே தான் தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்ககா தான் உங்களை கடத்தி வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடத்தி சென்ற 14 மீனவர்களையும் 3 நாட்கள் சிறை வைத்த பின்பு நேற்று அவர்களை விடுவித்தனர். இன்று அதிகாலை பாம்பன் வந்த 14 மீனவர்களும் தங்களை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்றது குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடமும், காவல் துறையினரிடமும் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
பின்னர் 14 மீனவர்களுக்கும் முதல் உதவி கொடுக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் கடத்தப்பட்டு சித்தரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.