பெரியாறு வழக்கு: கேரள அரசின் புதிய கோரிக்கை
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுவது தவறானது. 1979ம் ஆண்டு மத்திய நீர் ஆணையம் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின்னர் புதிய அணை கட்ட வேண்டும் என பரிந்துரைத்தது.
இதையடுத்து தமிழக மற்றும் கேரள பொறியாளர் குழுவினர் அதற்கான இடத்தையும் பார்த்து முடிவு செய்தனர். இதற்கான ஆதாரங்கள் கேரள அரசிடம் உள்ளன.
புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு புதிதாக கோரிக்கை விடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கனவே கூறப்பட்ட கோரிக்கைதான்.
மேலும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் முறைப்படி நடக்கவில்லை. பழைய முறையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன முறைப்படியான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை.
1886ம் ஆண்டு போடப்பட்ட பெரியாறு அணை ஒப்பந்தம் இப்போது செல்லுபடியாகாது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தானாகவே அந்த ஒப்பந்தம் ரத்தாகி விட்டது. ஆனால் அதை மறைத்து விட்டு தமிழகம் இத்தனை காலமாக கேரளத்துக்கும் உரிய நீரை எடுத்து வந்துள்ளது.












Click it and Unblock the Notifications