கோவை: அதிமுக பிரமுகர் கடத்தி கொலை
கோவை: கோவை அருகே அதிமுக பிரமுகர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (35). அதிமுகவை சேர்ந்த இவர் டெம்போ டிரைவராக இருந்தார். இவருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசூர் பஞ்சாயத்து தலைவர் அன்பரசுக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது மோதல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் வெள்ளிங்கிரியை அன்பரசு உள்பட 9 பேர் கும்பல் இரும்பால் பயங்கரமாக தாக்கினர். அவர் போட்ட கூச்சலில் மக்கள் ஓடி வந்து ஏன் அடிக்கீறிர்கள் என கேட்டதற்கு குடிபோதையில் ரகளை செய்தார். அதனால் அவரை அடித்தோம். போலீஸில் ஒப்படைக்கிறோம் என கூறி காரில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
காவல் நிலையத்திற்கு சென்றதும், வெள்ளிங்கிரி குடிபோதையில் இருப்பதாகவும், அவரரை காலையில் அழைத்து வாருங்கள் என போலீஸார் கூறினார். பிறகு வெள்ளங்கிரியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், வெள்ளிங்கிரியின் மனைவி பிரியா 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவனை மீட்டு தரும்படி கூறி போராட்டத்தில் குதித்தார்.
இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் செ.மா.வேலுசாமி மற்றும் அதிமுகவினர் விரைந்து வந்தனர். வெள்ளங்கிரியை கண்டு பிடிக்காவிட்டால் சாலை மறியல் செய்வோம் என்று வேலுச்சாமி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மேட்டுபாளையம் காரமடை மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் வந்ததும் போலீஸார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.
அது கடத்தப்பட்ட வெள்ளங்கிரி என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அன்பரசன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications