கோஷ்டி முற்றுகையால் தவித்த மொய்லி
சென்னை:சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்ள், கட்சியின் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்பட்டது. யாத்திரை நேற்று சென்னையில் முடிவடைந்தது. இதையொட்டி புரசைவாக்கத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி கலந்து கொண்டார். ஆனால் மாநில தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொள்ளவில்லை. என்னவென்று விசாரித்தபோது, கிருஷ்ணசாமியின் பெயரை அழைப்பிதழில் கீழே போட்டு விட்டார்கள் என்பதால் கோபத்தில் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு மொய்லி விமான நிலையம் வந்தார். அங்கு கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் திரண்டனர்.
மொய்லியை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை புறக்கணித்து, அலட்சியமாக நடந்து கொள்ளும் ஜி.கே.வாசன் மீது (கிருஷ்ணசாமியின் அருகில்தான் அப்போது வாசன் நின்று கொண்டிருந்தார்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மொய்லியைப் பாதுகாப்புடன் அங்கிருந்து அகற்றி உள்ளே கொண்டு சென்றனர்.
முன்னதாக, கூட்டத்தில் வாசன் பேசுகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இளைஞர் வடிவில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், உயிரோட்டமாக இருப்பது இளைஞர் காங்கிரஸ் தான்.
தமிழகத்தில் அமையும் ஆட்சியை நிர்ணயிப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். இவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கிராமங்கள் தோறும் இளைஞர் காங்கிரசையும் கட்சியையும் பலப்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சியே நமது லட்சியம். இளைஞர் எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications