ஆரம்பிச்சிருச்சுய்யா, வதந்தி ஆரம்பிச்சிருச்சுய்யா!
வேலூர்:தமிழ்நாட்டை அவ்வப்போது வினோதமான வதந்தி கிளம்பி மக்களைக் கலக்கும். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான வதந்தி கிளம்பி மக்களைக் குழப்ப ஆரம்பித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் ஒரு வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் உள்ள ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கு பச்சை வண்ண சேலை கொடுத்தால் ஆயுள் கெட்டியாகும் என கிளம்பிய அந்த வதந்தியால் பச்சை கலர் புடவைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, விற்காத சேலைகள் கூட விற்றுத் தீர்ந்தன.
அதேபோல சமீபத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த தினம் சரியில்லை என்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒரு புரளி கிளம்பியது. இதையடுத்து வீடுகளில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளைப் பொருத்தி வைத்தனர் பெண்கள்.
இந்த நிலையில், தற்போது தமிழ்ப் புத்தாண்டை வைத்து ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டான சர்வஜித், சனிக்கிழமை பிறப்பதால், குடும்பத்தின் தலைமகனுக்கு ஆபத்து என்பதுதான் இந்த வதந்தி.
வேலூரில்தான் இந்த வதந்த முதலில் கிளம்பியது. இதற்கு பரிகாரத்தையும் புரளி கிளப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வீட்டில் உள்ள மூத்த மகனை ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய், தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி, 3 முறை அவரைச் சுற்றி திருஷ்டி கழித்தால் பிரச்சினை சரியாகி விடுமாம்.
இதையடுத்து நேற்று மாலை முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில்கள் அனைத்தும் படு பிசியாக மாறியுள்ளன. வீட்டில் உள்ள தலைமகன்கள் அனைவரையும் அவர்களது அம்மாக்கள் அழைத்து வந்து திருஷ்டி சுற்றிப் பரிகாரம் செய்து பத்திரமாக அழைத்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி மகன்களை பிள்ளையார் விக்கிரகம் முன்பு நிறுத்தி, அசையாதப்பா, அப்படியே நில்லு என்று கூறி தலை முதல் கால் வரை பெரிய சுற்றாக 3 முறை சுற்றி தேங்காயை உடைத்துப் பெண்கள் பரிகாரம் செய்கின்றனர்.
தலைமகன்களுன், தாய்மார்கள் பிள்ளையார் கோவில்களுக்குப் படையெடுத்து வருவதால் அப்பகுதியில் உள்ள தேங்காய் வியாபாரிகளுக்கு அடித்தது லக்கி பிரைஸ். கிடுகிடுவென தேங்காய் விலையை உயர்த்தி அமோகமாக காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications