ஆட்டோவில் மாணவர்கள் கடத்தல்:விரட்டிப் பிடித்து மீட்ட மக்கள்
நாகர்கோவில்:நாகர்கோவிலில் 7 மாணவ, மாணவிகளை ஆட்டோவில் கடத்திய டிரைவரை, பொதுமக்கள் ஒன்று திரண்டு விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவிலில், உள்ள தேரைக்கால் என்ற பகுதியில் 7 மாணவ, மாணவியர் பள்ளி செல்வதற்காக பள்ளிப் பேருந்துக்குக் காத்திருந்தனர். ஆனால் வழக்கமான நேரத்தில் பேருந்து வரவில்லை.
இந்த சமயத்தில் ஒரு ஆட்டோ வேகமாக வந்து நின்றது. பள்ளிப் பேருந்து பழுதடைந்து விட்டது. இந்த ஆட்டோவில் அழைத்து வருமாறு உங்களது பள்ளிக்கூடத்தில்தான் கூறினார்கள். வந்து ஏறிக் கொள்ளுங்கள் என்று ஆட்டோ டிரைவர் கூறவே, மாணவ, மாணவியர்கள் அதில் ஏறிக் கொண்டனர்.
ஆனால் பள்ளிக்குச் செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோ சென்றது. இதனால் பயந்து போன மாணவ, மாணவியர் கத்திக் கூச்சல் போட்டனர்.
இதைப் பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள், கிடைத்த வாகனங்களில் ஏறி ஆட்டோவை துரத்தினர். சில விநாடி துரத்தலுக்குப் பின்னர் ஆட்டோ மடக்கி நிறுத்தப்பட்டது.
டிரைவரை சரமாரியாக அடித்த பொதுமக்கள் அவரை ஆட்டோவுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எதற்காக அவர் மாணவர்களை கடத்த முயன்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications