ஆதிகேசவன் பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது
சென்னை:வெளிநாட்டு நிதியுதவி பெற்றுத் தருவதாக சென்னை ஆதிகேசவன் பாணியில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்று, பணம் கொடுக்காத ஆத்திரத்தில், கட்டுமான காண்டிராக்டரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய நைஜீரிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல கோடி பணத்தை ஸ்வாஹா செய்து இப்போது கைதாகி கம்பி எண்ணி வருகிறார்.
அதே பாணியில், சென்னையைச் சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற இரு நைஜீரிய இளைஞர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர், அருகே உள்ள பாடியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரை நைஜீரியாவைச் சேர்ந்த இரு வாலிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெற்றுத் தருகிறோம். அதற்கு அட்வான்ஸாக ரூ. 10 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை சரவணக்குமார் நம்பவில்லை. இருந்தாலும், நேரில் சென்று அவர்களை சந்தித்து என்னதான் கூறுகிறார்கள் என அறிய விரும்பினார் அவர்.
இதையடுத்து அவர்கள் கூறிய இடமான அம்பத்தூர் கனரா வங்கி கிளை அலுவலகம் முன்பு நின்றார். அப்போது இரு நைஜீரிய இளைஞர்களும் அங்கு வந்தனர். பணத்தை தருமாறு இருவரும் சரவணக்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணத்தைக் கொண்டு வராத சரவணக்குமார், முதலில் கடன் உதவி தரும் நிறுவனம் குறித்த தகவல்களைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அதற்குப் பதில் தராத இரு நைஜீரியர்களும், தங்களிடமிருந்து கத்தியால் சரவணக்குமாரை குத்தி விட்டு அவர் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படையை அமைத்த அம்பத்தூர் போலீஸார் சென்டிரல் ரயில் நிலையம், விமான நிலையத்தை முற்றுகையிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இரு நைஜீரியர்களும் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் கப்பென பாய்ந்துப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர் ராபின்சன், ரேமான்ட் ஓசாத் எனத் தெரிய வந்தது. இருவரும் ஏற்கனவே, சில மாதங்களுக்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெகன்னாதன் என்கிற கட்டுமான நிறுவனத்தின் மேலாளரிடம் இதேபோல ரூ. 3.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 18 லட்சம் பணத்தை அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு டெல்லிக்குத் தப்பினர்.
மீண்டும் சென்னைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சரவணக்குமாரிடம் மோசடி செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டனர்.
ஜெகன்னாதனை மோசடி செய்தது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது. இதுதவிர போதைப் பொருள் கடத்தலிலும் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அம்பத்தூர் போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.