அம்மா வாங்காதீங்க, அக்கா வாங்காதீங்க!
சென்னை:ரிலையன்ஸ் காய்கறிக் கடைக்கு காய்கறி வாங்க வந்த பெண்களின் காலில் விழுந்து இங்கு காய்கறிகளை வாங்காதீர்கள், சிறு வணிகர்களின் கடைகளுக்கே போய் வாங்குங்கள் என்று கோரி பாமகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்து வரும் காய்கறிக் கடைகளுக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் இந்தக் கடைகளில் போய் காய்கறி வாங்க வேண்டாம் என்று கோரி பொதுமக்களுக்கு பிட் நோட்டீஸ் கொடுத்துப் போராட்டம் நடத்தினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இந்த நிலையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடைகள் முன்பு நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
காய்கறி வாங்க வந்த பெண்களின் காலில் விழுந்து, தயவு செய்து இங்கு வாங்காதீர்கள் என்று பாமகவினர் கேட்டுக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
தி.நகரில் உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு நடந்த போராட்டத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
பாமகவினரின் இந்த நூதனப் போராட்டத்தால் பெண்கள் குழப்பமடைந்தனர். சில பெண்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். ஆனால் பலர், பாமகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் காலில் விழுந்ததையும் மீறி ரிலையன்ஸ் கடைக்குள் சென்று காய்கறிகளை வாங்கி விட்டுச் சென்றனர்.