தமிழக கடல் ரோந்துக்கு புதிய கப்பல்
சென்னை:தமிழக கடலோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட சாகர் என்ற அதி நவீன கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் வந்துள்ளது. இதையும் சேர்த்து தற்போது கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மொத்த கப்பல்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் தற்போது பெரும் பதட்டம் நிலவுகிறது. விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், விடுதலைப் புலிகள் விமானம் மூலம் கொழும்புக்குள் ஊடுறுவி விமானப்படைத் தளத்தை தாக்கியதற்குப் பின்னர் பதட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு கடல் மார்க்கமாக வெடிபொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.
இதை விட முக்கியமாக தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி, கொன்று குவித்து வருகிறது. இதைத் தடுக்க கிழக்குப் பிராந்திய கடல் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து தமிழக கடலோரப் பகுதியை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்திய கடல் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அதி நவீன ரோந்துக் கப்பலான சாகர் சென்னைக்கு வந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு சாகர் இயக்கி வைக்கப்பட்டது. கடத்தல் தடுப்பு, தேடுதல் பணிகள், கடலோரப் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதிகளுடன் கூடிய ரோந்துக் கப்பல் சாகர்.
இதுதவிர தீயணைப்புக் கருவிகளும் இந்தக் கப்பலில் உள்ளன. கடலில் ஏற்படும் தீவிபத்துக்களின் போது துரிதமாக செயல்படும் வகையில் அதி நவீன தீயணைப்புக் கருவிகள் இதில் உள்ளன.
மேலும் அதி நவீன மெல்லோ சூப்பர் எனும் பிரமாண்ட துப்பாக்கியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. வானில் செல்லும் விமானங்களைத் தாக்கக் கூடிய வல்லமை படைத்தது இந்தத் துப்பாக்கி.
2000 டன் எடை கொண்ட பொருட்களை சுமக்கக் கூடிய தன்மை படைத்த இக்கப்பல் மணிக்கு 21 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
இக்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தது. இக்கப்பலை தலைமைச் செயலாளர் திரிபாதி நேரில் பார்வையிட்டார். கப்பலில் உள்ள வசதிகளையும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் திரிபாதி பேசுகையில், சாகர் கப்பலின் வரவால் தமிழக கடலோரப் பகுதிகள் முழுமையான பாதுகாப்பின் கீழ் வந்துள்ளன.
இலங்கை அரசுடன் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசின் விருப்பம், கோரிக்கை என்றார் திரிபாதி.
இக்கப்பலில் 106 வீரர்களும், 16 அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பார்கள். சென்னையில் இவர்கள் தங்கியிருப்பார்கள்.
சாகரையும் சேர்த்து தற்போது கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படையில் மொத்தம் 22 கப்பல்கள் உள்ளன. கிழக்கு பிராந்தியம் என்பது கொல்கத்தாவிலிருந்து தமிழகத்தின் ராமேஸ்வரம் வரையிலான பகுதியாகும்.