மண்டபம் அகதி குழந்தையிடம் திருடிய பெண் போலீஸ்துப்பாக்கியையும் தொலைத்தார்-4 பேர் சஸ்பெண்ட்!
ராமநாதபுரம்:மண்டபம் அகதிகள் முகாமில் பணியில் இருந்த 4 பெண் போலீசார் தூக்கத்தில் தங்களது துப்பாக்கிகளை தொலைத்ததால் நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் ஆண், பெண்களுக்கென்று தனித்தனியாக 2 முகாம்கள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3ம் தேதி பெண்கள் முகாமில் பணியில் ஈடுபட்டு இருந்த வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகியோர் வைத்திருந்த இரு .303 ரக துப்பாக்கிகள் தொலைந்து போயின.
இதையடுத்து ராமேஸ்வரம் போலீசார் மண்டபம் முகாமில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் அந்த துப்பாக்கிகள் கிடந்தது. துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார் அகதிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பெண் போலீஸ் வெங்கடேஸ்வரி முகாமில் தங்கியிருக்கும் ரதிகலா என்பவரின் குழந்தை அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி இருக்கிறார். இதை அக் குழந்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளது.
இதையடுத்து வெங்கடேஸ்வரி நகைகளை கொடுத்து விடுவதாகவும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வெங்கடஸ்வரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
மேலும் பணியின்போது 4 பேரும் தூங்கிய நேரத்தில் யாரோ ஒருவர் இவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சென்று மரத்தடியில் போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.
அகதிகளை பெண் போலீசார் மிரட்டியதால் ஆத்திரமடைந்த சிலர் இதை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த பெண் போலீசார் வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகிய 4 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications