சென்னை விமான நிலையத்தில் விமானிகள் அடிதடி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் 2 விமானிகள் கிண்டலடித்து பேசி கொண்டிருந்த போது அது பிரச்சனையாகி இருவரும் அடித்துக் கொண்டு உருண்டனர்.
பாரமெளண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளான விஜய் பார்மர்(57) மற்றும் அமெரிக்காவின் ஜோசப் கிராண்ட் பாக்ட்(55), இருவரும் நேற்று காலை பணிக்கு வந்தபோது கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜோசப் விஜய்யை பார்த்து, நீ விமான ஓட்ட வைத்திருக்கும் லைசென்ஸ் உண்மையானதா எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே சண்டை முற்றியது.
விஜய்யின் கன்னத்தில் ஜோசப் அறைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இதைப் பார்த்த விமான ஊழியர்கள், பயணிகள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு இருவரும் பணிக்கு திரும்பினர்.
விஜய் மதுரை விமானத்தை இயக்கிச் சென்றார். ஜோசப் ஹைதராபாத் விமானத்தை இயக்கிச் சென்றார்.
மதுரையில் இருந்து சென்னை திரும்பிய விஜய் மருத்துவமனைக்கு சென்று தன்னை ஒருவர் அடித்துவிட்டதாக கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கான மருத்துவ சான்றிதழும் வாங்கி கொண்டார்.
பின்னர் அந்த சான்றிதழுடன் விமான நிலைய போலீஸாரிடம் சென்று தன்னை ஜோசப் அடித்துவிட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து ஜோசப் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் விமானிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பல விமான நிறுவனங்களும் வெளிநாட்டினரை விமானிகளாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications