சென்னையை குறி வைக்கும் வெளி மாநிலநிலக் கொள்ளையர்கள்- பாமக எச்சரிக்கை
சென்னை:சென்னை புறநகர்ப் பகுதிளில் வெளி மாநிலத்தினர் அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவிப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சித் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,
சென்னை புறநகர்ப் பகுதி விவசாய நிலங்களை வெளிமாநிலங்களைச் சேர்ந்த நில அபகரிப்பாளர்கள், பெரும் பணக்காரர்கள் குறி வைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து அரக்கோணம், விழுப்புரம், காஞ்சிபுரம் வரை உள்ள பகுதிகளில் 2000 ஏக்கர் நிலத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கும்பல் வளைத்துப் போட்டுள்ளது.
அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. யார் தருகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பணத்தைக் கொண்டு சென்னையைச் சுற்றிலும் நிலத்தை வளைத்துப் போட்டு வருகின்றனர்.
இதை விட கொடுமையானது என்னவென்றால், பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு நிலங்களை விற்கும் விவசாயிகள் அந்தப் பணத்தை வங்கியில் கொண்டு சென்று போடப் போனால், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று வங்கியில் ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். இதனால் பணத்தை வங்கியிலும் போட முடியாமல், வேறு நிலத்தையும் வாங்க முடியாமல் தவிக்கும் அந்த விவசாயிகளை நிலக் கொள்ளையர்கள் அணுகி பணத்தையும் மோசடி செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்த நிலக் கொள்ளை காரணமாக சென்னை நகரில் அரசுப் பணியில் இருப்பவர்களும், சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்களும், புறநகர்ப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் கூட வாங்க முடியாத துயர நிலை நிலவுகிறது.
இந்த நில மோசடிளுக்கு அதிகாரிகளும் துணையாக இருப்பதாக தெரிய வருகிறது. எனவே பெரியஅளவிலான நில விற்பனை குறித்த பத்திரப் பதிவுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். மோசடி செய்பவர்களை, நிலத்தை வாங்கிக் குவிப்பவர்களை,குறிப்பாக வெளிமாநிலத்தவர்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது முதல் கட்ட போராட்டம்தான். விரைவில் பெரிய அளவிலான போராட்டத்தில் பாமக தலைமையில் பல்வேறு அமைப்புகளும் குதிக்கவுள்ளன. அதற்குள் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார் மணி.












Click it and Unblock the Notifications