குண்டு பல்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
சென்னை:அதிக மின்சாரத்தைக் குடிக்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குண்டு பல்புகளைத் தடை செய்ய வலியுறுத்தி 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை கிரீன்பீஸ் அமைப்பு இன்று தொடங்கியது.
இதுகுறித்து கிரீன் பீஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சஞ்சீவ் கோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், குண்டு பல்புகளால் ஒரு பயனும் கிடையாது. மின்சாரத்தை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த பல்புகளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பசுமை இல்லச் சீர்கேட்டுக்கு குண்டு பல்புகளும் முக்கிய காரணம். எனவே இந்தியாவில் குண்டு பல்புகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2010ம் ஆண்டுக்குள் குண்டு பல்புகளை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி பிரதமருக்கு அனுப்ப தீர்மானித்துள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அமைச்சர்கள் சிலருடன் பேசியுளளோம். அவர்களும் எங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குண்டு பல்புகளை விட டியூப் லைட்டுகளே சிறந்தது என்பதை மக்கள் உணர வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள புள்ளி விவரப்படி, தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 10 ஆயிரத்து 98 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்தி போதிய அளவில் இருந்தபோதிலும் கூட குண்டு பல்புகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதில் பெருமளவு மின்சாரம் வீணாக உறிஞ்சப்பட்டு விடுகிறது.
எனவே இந்த பல்புகளை ஒழித்துக் கட்டினால் பெருமளவிலான மின்சாரத்தை சேமிக்க முடியும். புதிதாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான செலவுகளும், அவசியமும் குறையும்.
குண்டு பல்புகளை விட்டு விட்டு டியூப் லைட் போன்ற குறைந்த அளவிலான மின்சாரமே தேவைப்படும் விளக்குகளைப் பயன்படுத்தினால், ஒரு நாளைக்கு 43 மில்லியன் கிலோவாட் மணி நேரங்களை சேமிக்க முடியும்.
மேலும் இதன் மூலம், குண்டு பல்புகளிலிருந்து ஒரு நாளைக்கு வெளியாகும் 36 ஆயிரம் டன் கார்பன் டை ஆக்சைட்டையும் தடுக்க முடியும். கார்பன் டை ஆக்சைடு, சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடு என்பது அனைவரும் அறிந்ததே.
பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதால் பசுமை இல்லம் சீர்கெட்டு வருகிறது. குண்டு பல்புகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டினால் இந்த சீர்கேட்டை வெகுவாக குறைக்க முடியும் என்றார் கோபால்.












Click it and Unblock the Notifications