இலங்கை - அயர்லாந்து இன்று மோதல்
கிரெனடா: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆட்டத்தில் இன்று இலங்கையும், அயர்லாந்தும் மோதவுள்ளன.
உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண அணிகளாக கருதப்பட்ட அயர்லாந்தும், வங்கதேசமும் மிகப் பெரிய அணிகளை சர்வ சாதாரணமாக வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
பாகிஸ்தான், வங்கேதச அணிகளை அயர்லாந்து வீழ்த்தி அசத்தியது. வங்கதேசமோ, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு வலுவான அணிகளை வீழ்த்தி பயமுறுத்தியது.
இந்த நிலையில் அயர்லாந்து அணியுடன் இன்று இலங்கை விளையாடவுள்ளது. கிரெனடாவில் நடைபெறவுள்ள இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான அணிகளிடம் கூட சற்றும் தடுமாறாமல், பயப்படாமல் தைரியமாக விளையாடி வருகிறது அயர்லாந்து. வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட துணிச்சலுடன் முயற்சிக்கிறது அயர்லாந்து. இன்றைய போட்டியிலும் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்று கேப்டன் ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.
எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் இலங்கை அணியையும் வெல்ல முடியும் என்றும் ஜான்ஸ்டன் படு நம்பிக்கையாக கூறுகிறார்.
இன்றைய போட்டியில் இலங்கை எளிதாக வெல்லுமா அல்லது சிரமப்பட்டு வெற்றியை சுவைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.